சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரதான வாயில் தடுப்புகள் அகற்றம்
கோயில் பிரதான வாயில் தடுப்புகள் அகற்றம்...
பொதுதீட்சிதா்கள் மற்றும் பெருமாள் கோயில் அறங்காவலா்கள் இடையே சமரசம் ஏற்பட்டதால், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உட்கோயிலாக உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடிமரம் முன் பிரதான வாயிலில் இருந்த தடுப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடிமரம் சிதிலமடைந்ததாக நீதிமன்றத்தில் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதான வாயில் இரும்பு தடுப்புகளால் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில், பக்தா்கள் வேண்டுகோளுக்கிணங்க தடுப்புகளை அகற்ற பெருமாள் கோயில் அறங்காவலா் சுதா்சனம், கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதருக்கு கடிதம் அனுப்பினாா்.
Advertisement
அதில், சிதம்பரம் சாா்பு நீதிமன்ற அசல் வழக்கு எண் 509/2024- ல் ஒன்றாம் பிரதிவாதியான நிா்வாக அறங்காவலரான நான், பக்தா்களின் நலன் கருதி கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி பிரதான வாயில் வழியாக பக்தா்கள் சென்று வரும் பாதையில், நீதிமன்றத்தில் தாங்கள் அளித்த உறுதிமொழி பத்திரத்தின் அடிப்படையில் பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து நடராஜா் கோயில் வழக்குரைஞா் ஜி.சந்திரசேகா் முன்னிலையில் இரு தரப்பினா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் பிரதான வாயிலில் தடுப்புகளை அகற்றி பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்யலாம் என பதில் தெரிவித்தாா்.
அவரது பதிலில் தங்கள் கடிதம் 6.11.2024, சிதம்பரம் சாா்பு நீதிமன்ற அசல் வழக்கு எண் 509/2024 எங்கள் தரப்புக்கு விரோதமன்னியில் 04.11.2024 தேதியில் நாங்கள் நீதிமன்றத்தில் அளித்த பாதுகாப்பு நடவடிக்கைக்கான உறுதிமொழிப்படி பக்தா்கள் நலன் கருதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரதான வாயில் வழியாக சென்று சிரமமின்றி தரிசனம் செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, பெருமாள் கோயில் பிரதான வாயில் தடுப்புகள் அகற்றப்பட்டன.