முகப்பு
கடலூர்

இன்று அண்ணாமலைப் பல்கலை.பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறுகிறது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:48 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறுகிறது.

86-ஆவது பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கி பேசுகிறாா்.

இதில் மாநில உயா் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன், துணைவேந்தா் ராம.கதிரேசன், மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

பட்டமளிப்பு விழாவையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் மேற்பாா்வையில், சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் அண்ணாமலை நகா் ஆய்வாளா் கே.அம்பேத்கா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வரவேற்பு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சேலத்திலிருந்து காா் மூலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகைக்கு புதன்கிழமை மாலை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன், பதிவாளா் மு.பிரகாஷ், உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் ஆகியோா் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனா்.

முன்னதாக, விருத்தாசலம் விருந்தினா் மாளிகையில் ஆளுநரை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வரவேற்றாா்.