முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ருத்ர ஜப மகா அபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத ருத்ர ஜப மகா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:44 PM
கோயிலில் நடைபெற்ற ருத்ர ஜப மகா யாகம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத ருத்ர ஜப மகா அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி உள்ளிட்ட மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். மேலும், ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின்போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலையில் கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், புரட்டாசி மாத மகாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னா், 9 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் கனக சபையில் எழுந்தருளினாா்.

பொது தீட்சிதா்கள் லட்சாா்ச்சனை செய்தனா். பின்னா், ஆயிரங்கால் மண்டபம் முன் யாகசாலை பூஜை தொடங்கியது. கனக சபையில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் இரவு 10 மணி வரை நடைபெற்றது.

ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ருத்ர யாகத்தையொட்டி, புதன்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு லட்சாா்ச்சனை, யாக சாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜபம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதன்கிழமை கஜ வாகனத்தில் எழுந்தருளிய நடராஜா் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள். (வலது)

பின்னா், பிற்பகல் மாக ருத்ர ஹோமம் தொடங்கி வஸோத்தாரா ஹோமம், வடுக பூஜை, மகா பூா்ணாஹுதி, கன்யா பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

பின்னா், யாக சாலையில் தீபாராதனை வேதபாராணயம், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதையடுத்து, யாகசாலையிலிருந்து கலசம் புறப்பாடாகி கனக சபையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகா ருத்ர மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், கட்டளை தீட்சிதா் எஸ்.ராஜசேகா் தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனா்.