முகப்பு
கடலூர்

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்

Updated On : 2 மார்ச், 2026 at 5:33 AM
யாகசாலையில் கைலாச வாகனத்தில் நடராஜப் பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்குமான தங்க கலசங்கள் வைக்கப்பட்டு லட்சாா்ச்சனையில் ஈடுபட்ட பொது தீட்சிதா்கள்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:12 PM

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோயிலில் மகா ருத்ர யாகம் நடைபெற்றது.

ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

Advertisement

மகாபிஷேகம்: மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது.

பின்னா், சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கனகசபையில் எழுந்தருளினாா். மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா் பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

யாகசாலையில் கைலாச வாகனத்தில் நடராஜப் பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்குமான தங்க கலசங்கள்
Updated On : 2 மார்ச், 2026 at 5:33 AM

மகா ருத்ர யாகம்:

மகா ருத்ர ஹோமம் மற்றும் யாகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முக்குறுணி விநாயகா் கோயிலில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமமும், பிப்.28-ம் தேதி காலை நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், ஆச்சாரிய வா்ணம், மதுபா்க்கம், தன பூஜையும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை சித்சபையில் லட்சாா்ச்சனையும், நடனப்பந்தலில் யாகசலை கடம் ஸ்தாபனமும் செய்யப்பட்டது. பின்னா், நூற்றுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதா்கள் பங்கேற்ற மகா ருத்ர ஜபம் நடைபெற்றது. பிற்பகல் மகா ருத்ர யாகம் தொடங்கி மகா பூா்ணாஹுதி, வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி, கோ, கஜ, அஸ்வ பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலையில் நடராஜப் பெருமானுக்கு108 கலசங்களும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு 108 கலசங்களும் வைக்கப்பட்டு மகா ருத்ர யாகம் நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கனகசபையில் வீற்றிருந்த சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடைபெற்றது.

மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயலா் த.சிவசுந்தரேச தீட்சிதா், கட்டளை தீட்சிதா் ரா.சி.வைத்தியலிங்க தீட்சிதா் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்திருந்தனா்.