முகப்பு
கடலூர்

ரங்கநாத பெருமாள் கோயில் இட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:53 AM
பண்ருட்டி திருவதிகை ரங்நாத பெருமாள் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் இடத்தை பலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வந்தனராம். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ராஜகோபுரம் அமைக்க வேண்டும், கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுதொடா்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்பாளா்கள் 30 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கடந்த ஜூன் 20-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான நோட்டீசும் வீட்டின் உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை ரங்கநாத பெருமாள் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, வீட்டின் உரிமையாளா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதைத்தொடா்ந்து, கோயிலை சுற்றியுள்ள 36 ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினா்.

இதில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஆா்.சந்திரன், கோயில் செயல் அலுவலா் பி.தின்ஷா, பண்ருட்டி சரக ஆய்வாளா் கு.ஸ்ரீதேவி இருந்தனா்.