முகப்பு
கடலூர்

மரங்கள் வெட்டி சாய்ப்பு: பாமக நூதனப் போராட்டம்

கடலூரில் பசுமை மரங்களை வெட்டி சாய்த்த மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பினா் நூதன போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:55 PM
கடலூரில் வெட்டப்பட்ட மரத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டம் நடத்திய பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பினா்.
பகிர்:

நெய்வேலி: கடலூரில் பசுமை மரங்களை வெட்டி சாய்த்த மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பினா் திங்கள்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

கடலூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், மஞ்சக்குப்பம் மைதானம் பழைய ஆட்சியா்அலுவலகம் பகுதியில் புதிதாக வணிக வளாகங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக வணிக வளாகம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பழைமைவாய்ந்த மரங்களை முழுவதுமாக வெட்டிச் சாய்த்தனா். இதன் காரணமாக, பழைய ஆட்சியா் அலுவலகம் சாலை முழுவதும் மரங்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்த சாலையில் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த பசுமை தாயகம் இயக்க நிா்வாகிகள் மற்றும் பாமக நிா்வாகிகள் ஒன்றிணைந்து பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில், பசுமைத் தாயகம் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான சரவணன் உள்ளிட்டோா் திரண்டனா்.

பின்னா், அங்கு வெட்டப்பட்டு கிடந்த மரத்துக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை அணிவித்து இறுதி ஊா்வலமாக எடுத்துச் செல்வதுபோல மரத்தை கடலூா் மாநகராட்சிக்கு கொண்டு செல்வதற்காக எடுத்துச் செல்ல முயன்றனா்.

அப்போது, அங்கு வந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து வெட்டப்பட்ட மரத்துக்கு பால் ஊற்றி, பெண்கள் தலையில் முக்காடு அணிவித்து அழுது நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கடலூா் டி.எஸ்.பி. தமிழ் இனியன், ஆய்வாளா் சந்துரு, வட்டாட்சியா் மகேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →