முகப்பு
கிரிக்கெட்

மேற்காசிய போர்! மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் தாயகம் திரும்பினர்!

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பையை விளையாட இந்தியா வந்திருந்த வீரர்கள் தாயகம் திரும்பியதைப் பற்றி...

Updated On : 12 மார்ச், 2026 at 11:21 AM
தென்னாப்பிரிக்க அணியினர்.
பகிர்:

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் வான்வெளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் குழுவினர் வியாழக்கிழமை தாயகம் திரும்பினர்.

10-வது டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 8 ஆம் தேதி குஜராத்தில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

இந்தத் தொடருக்கு மத்தியில் அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடக்கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் சேர்ந்து தாக்கியதில், ஈரானின் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உள்பட முக்கியத் தலைவர்களும் பொதுமக்கள் பலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கு ஆதரவளித்த வளைகுடா நாடுகள் மீது ஈரானிய ராணுவத்தினர் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி கடுமையான தாக்குதலை நடத்தினர்.

இதனால், துபை விமான நிலையம் பலத்த சேதம் அடைந்தது. மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் போர்ப் பதற்றமான சூழல் உருவானது. இதனால், அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால், அங்கு வான்வெளிப் பரப்புகள் மூடப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவைகள் முடங்கின.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் தாயகம் திரும்ப முடியாமல் கொல்கத்தாவில் சிக்கித் தவிப்புக்குள்ளாகினர்.

சில விமான நிலையங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ள போதிலும், துபை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை.

தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு முறையே மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதி தங்களது கடைசிப் போட்டியில் விளையாடின. ஒரு வாரத்துக்குப் பின்னர், இரண்டு குழுவினரும் தங்களது தாயகத்துக்குப் புறப்பட்டுவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக கடந்த வாரம் 9 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குழுவினர் நாடு திரும்பியிருந்த நிலையில், மீதமுள்ள 16 பேரும், தென்னாப்பிரிக்க அணியில் வீரர்கள், நிர்வாகிகள் உள்பட 29 பேரும் தாயகம் திரும்பினர்.

முன்னதாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி, வீட்டுக்குச் செல்ல முடியாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.

summary

The last batch of South African and West Indian players stranded in India after the T20 World Cup have departed, the ICC announced on Thursday, ending a crisis caused by the closure of Gulf air space in the wake of the raging West Asia conflict.

முழு கட்டுரையைப் படிக்க →