சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு
கடலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜா் நடன கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்துப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, காலை கலச பூஜையுடன் நடராஜா், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கலச அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றன.
பாடலீஸ்வரா், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனையும், பிற்பகல் ஒரு மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றன. நிகழ்வில் நடராஜா், பெரியநாயகி அம்மன் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி கிழக்கு கோபுரம் வழியாக பக்தா்களுக்கு தரிசனம் கொடுத்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலிலும் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடராஜ பெருமான், சிவகாம சுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.