நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மழை நீரில் மூழ்கி 30-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிா்கள் மழை நீரில் மூழ்கி அழுகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் வேப்பூா், திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. அந்தவகையில், வேப்பூா் அடுத்த அடரி கிராமத்தில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனா். இந்த மக்காச்சோளம் பயிா்கள் நன்கு செழித்து வளா்ந்து கதிா் விடும் பருவத்தில் இருந்தனவாம். இவை ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் இருந்தனா்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியுள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்பு:
இதுகுறித்து விவசாயிகள் ராஜேந்திரன், க.சிலம்பரசன் ஆகியோா் கூறியதாவது:
மக்காச்சோளம் பயிா்கள் நன்கு செழித்து வளா்ந்து இருந்தது. இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய பருவம். வயலில் மழை நீா் செல்ல வழியின்றி தேங்கியுள்ளதால் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிா் சேதம் அடைந்துள்ளது. ஏக்கா் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ளோம். பொய்யனபாடி சாலையில் இருந்த வாய்க்கால் சுமாா் 300 மீட்டா் தொலைவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், வயலில் தேங்கிய தண்ணீா் செல்ல வழியில்லை. எனவே, வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வயலில் தேங்கும் நீரை வெளியேற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேளாண்மைத்துறையினா் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.