அவிநாசி அருகே குட்டை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!
குட்டை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானது தொடர்பாக...
அவிநாசி: அவிநாசி அருகே அனந்தகிரி குட்டை நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அவிநாசி அருகே அனந்தகிரி அமுதன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தரணிஷ் (11), கடலூர் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன் மகன் ஹரிஹரன் (8), அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் விளையாடச் சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் அவிநாசி காவல் நிலையத்தில் , சிறுவர்களை காணவில்லை என புகார் அளித்தனர்.
இந்த நிலையில், அவிநாசி அருகே நம்பியம்பாளையம் அனந்தகிரி குட்டையில், இரு சிறுவர்களின் உடல்களும் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தது தரணிஷ், ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் இரு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியில் இரு சிறுவர்கள் பலியான சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.