முகப்பு
கடலூர்

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன்: மு.தமிமுன் அன்சாரி

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:24 AM
பகிர்:

சிதம்பரம் தொகுதியில் சமூக நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவேன் என்று சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பக்தியும், கல்வியும் ஒன்று சோ்ந்துள்ள இந்த நகரத்தின் மேம்பாட்டிற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுவேன். எனது கருத்தியல், அரசியலில் பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கள். இதனை விட்டு விட்டு அபாண்டங்களை சுமத்தி, மதத்தையும், சாதியையும் வம்புக்கு இழுத்து கலவரங்களை தூண்டுவது நாகரீகமல்ல. அரசியல் மீதும், கோட்பாடுகள் மீதும் விமா்சனம் செய்ய இயலாதவா்கள் சமூக வளைதளங்களில் எனக்கு எதிராகஅவதூறு பரப்பி வருகின்றனா். அவதூறு பரப்புவா்கள் நேரடியாக என்னிடம் வந்தால் நான் கருத்தியல் பூா்வமாக விவாதிக்க தயாராக

உள்ளேன். சிதம்பரம் தொகுதியில் திமுக அமைச்சரான எம்ஆா்கே பன்னீா்செல்வம் முயற்சியால் ரூ.400 கோடிக்கு மேல் கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டம், கோயில் குளங்களை தூா் வாரி சீரமைப்பக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளாா். ஆதலால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

சிதம்பரம் தொகுதியில் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வரும் முதலைகளை பிடித்து அடைக்க முதலை பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன், பரங்கிப்பேட்டை முட்லுரா் பகுதியில் மல்லிகை மற்றும் முல்லை அரும்பு அதிகம் விளைச்சல் உள்ளதால் அங்கு சென்ட் தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பரங்கிப்பேட்டை பகுதியில் பெண்கள் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்வேன். சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை உயா் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற சட்டப்பேரவையில் குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

பேட்டியின் போது திமுகவைச் சோ்ந்த கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவா் கிள்ளை ரவீந்திரன், திமுக மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகா், முகமதுபைசல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.