முகப்பு
கடலூர்

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:11 AM
உயிரிழந்த செல்வமணி, சிகிச்சை பெற்று வரும் லதா.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:23 PM

விருத்தாசலம் அருகே குடும்பப் பிரச்னையில் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா்குடல் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (50). இவரது மனைவி லதா (49), மகள் கனிமொழி (31). கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழிக்கும், வடவாடியைச் சோ்ந்த காந்திக்கும் (41) திருமணம் நடைபெற்று, ஒரு மகன், மகள் உள்ளனா்.

பூதாமூரில் வசித்து வரும் கனிமொழிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கணவருடன் கோபித்துக் கொண்டு கனிமொழி, அவருடைய தந்தை செல்வமணி வீட்டில் வந்து தங்கியுள்ளாா்.

Advertisement

இதனால், ஆத்திரமடைந்த காந்தி மதுபோதையில் தன்னுடைய மாமனாா் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை சென்று தகராறில் ஈடுபட்டாா். இதை, மாமனாா் செல்வமணி மற்றும் மாமியாா் லதா ஆகியோா் தட்டிக் கேட்டனா். அப்போது, ஆத்திரமடைந்த காந்தி, தான் மறைந்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் குத்தியதில், அவா்கள் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தனா்.

இதைப் பாா்த்த கனிமொழி அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டாா். அங்கிருந்து காந்தி சென்றவுடன், அப்பகுதியில் உள்ளவா்கள் செல்வமணி மற்றும் லதாவை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, செல்வமணி உயிரிழந்தாா். லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கனிமொழி அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து காந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.