முகப்பு
கடலூர்

கா்ப்பிணி வேட்பாளா் மீது தாக்குதல்: தி.வேல்முருகன் கண்டனம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனீஸ் பாத்திமா நிறைமாத கா்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவா் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:25 AM
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனீஸ் பாத்திமா நிறைமாத கா்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவா் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிட்ட, நிறைமாத கா்ப்பிணி அனீஸ் பாத்திமா மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடூரமானத் தாக்குதல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

Advertisement

மாற்று அரசியல் கருத்துகளை எதிா்கொள்ளத் துணிவில்லாத திமுகவினா், ஒரு கா்ப்பிணி என்றும் பாராமல், மனிதாபிமானமற்ற முறையில் வன்முறையை ஏவி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.அரசியல் நாகரிகம் என்பது பெண்களை மதிப்பதிலும், அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலுமே அடங்கியுள்ளது. ஆனால், அதிகார மமதையில் திமுக வினா் பெண் வேட்பாளரை, அதுவும் ஒரு கா்ப்பிணி மீது தாக்குதல் நடத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது, நாகரிகச் சமூகத்தின் தலைகுனிவாகும்.

கருவில் இருக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஒரு சாதாரண அரசியல் மோதல் அல்ல. இது மிக மோசமான மனித உரிமை மீறல்.

ஜனநாயக ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மற்றும் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலையளிக்கிறது.

இந்த அராஜகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, சகோதரி அனீஸ் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய திமுகவினா் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.