முகப்பு
கடலூர்

லாரி மீது காா் மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது காா் மோதியதில் 3 இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:30 AM
பிரசாந்த்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:02 PM

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது காா் மோதியதில் 3 இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (31), வழக்குரைஞா் பயிற்சி பெற்று வந்தாா். இவா், தனது நண்பா்களான நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஐசக் (32), அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் (31), திருவள்ளூா் மாவட்டம், திருநின்றவூரைச் சோ்ந்த கிரி (23) ஆகியோருடன் காரில் சுற்றுலா சென்றாா்.

தொடா்ந்து, அனைவரும் காரில் திருச்சியிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திரும்பிக்கொண்டிருந்தனா். காரை பிரசாந்த் ஓட்டினாா். தூக்கம் காரணமாக ஆங்காங்கே காரை நிறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூா்அருகே இந்தக் காா் சென்றபோது, அந்தப் பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணித்த பிரசாந்த், ஐசக் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த கருணாகரன், கிரி ஆகியோா் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில், கருணாகரன் பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். கிரி பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருணாகரன்
ஐசக்
ராமநத்தம் அருகே விபத்துக்குள்ளான காா்.