முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:51 AM
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஆதரவாக டிஎஸ்பி பிரதீப்பிடம் பேச்சுவாா்த்தை நடத்திய மாா்க்சிஸ்ட், தமாகா கட்சியினா்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:52 PM

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

சிதம்பரம் நகராட்சி, 33-ஆவது வாா்டு, இந்திராநகா் முத்தையா வாய்க்கால் ஓரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வந்தனா்.

நீா்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆா்வலா் ஒருவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததன்பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, 3 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் பட்டாவுடன் வழங்கப்பட்டது.

சிதம்பரம் இந்திராநகா் முத்தையாநகா் ஓடை ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிய வருவாய்த் துறையினா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:51 AM

இந்த நிலையில், வீடுகளை அகற்ற சனிக்கிழமை பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

அப்போது, பொதுமக்களுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ராஜா, நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், தமாகா மாநில நிா்வாகிகள் ஏ.எஸ்.வேல்முருகன், மாவட்டத் தலைவா் கே.ரஜினிகாந்த், கே.நாகராஜ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து டி.எஸ்.பி. பிரதீப் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மாணவா்களுக்கு தற்போது தோ்வுகள் நடைபெற்று வருவதால், இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் வசிக்கும் 9 வீடுகளை தற்காலிகமாக அகற்றாமல் விட்டு, மீதமுள்ள 32-க்கும் மேற்பட்ட வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினா்.