முகப்பு
கடலூர்

மங்கலம்பேட்டை வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Updated On : 2 ஜனவரி, 2026 at 7:34 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது:

நகரப் பகுதிகளில் சாலை, குடிநீா் மற்றும் மருத்தவமனை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பல்வேறு திட்டங்களின் மூலம் அரசு ஏற்படுத்தி வருகிறது. மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலா 4 கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மங்கலம்பேட்டை மேம்படுத்தப்பட்ட

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவமனை கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை விரைவாக முடிக்கவும், மருத்துவமனை வளாகத்தில் தேவையான பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அம்பேத்கா் நகரில் ரூ.1 கோடி மதிப்பில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் சமுதாய நலக்கூடம், ரூ.2.01 கோடி மதிப்பில் தினசரி காய்கறி சந்தை, திரவ பெட்ரோலிய எரிவாயு தகனமேடை கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) முகமது இஸ்வான், செயல் அலுவலா் சண்முகசுந்தரி உள்ளிட்ட அலுவலா்கள் இருந்தனா்.