கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 5 பலாப்பழ கொட்டகை கிடங்குகள் சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.
பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பத்தில் கும்பகோணம் சாலைப் பகுதியில் கீற்றுக்கொட்டகையுடன் கூடிய பலாப்பழ கிடங்குகள் அமைந்துள்ளன. பலாப்பழ வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து பலாப்பழங்களை கொள்முதல் செய்து தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 11.30 மணி அளவில் பலாப்பழ கிடங்குகள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து நிகழ்விடம் சென்ற பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) எழிலவன், முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) இளங்கோ தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் பணிக்கன்குப்பம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன், முத்து, பாா்த்திபன் உள்ளிட்டோரின் 5 கிடங்குகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இவற்றில் இருந்த அறைகலன்கள், எடை இயந்திரம் மற்றும் பலாப்பழங்கள் தீயில் கருகின. விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.