நெய்வேலி: கேலோ இந்தியா பீச் பென்காக் சிலாட் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற கடலூா் மாவட்ட மாணவா்களுக்கு வியாழக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் ஜன.5-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 2-ஆவது கேலோ இந்தியா பீச் பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தின் சாா்பில் கடலூா் மாவட்டத்தை சோ்ந்த சுதா்சன், லோகேஸ்வரன், செல்வகுமாா், போஸ் ராஜ குரு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 11 போ் பங்கேற்றனா். இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என தலா ஒரு பதக்கங்கள் வென்று சாதனை புரிந்தனா்.
பதக்கம் வென்ற வீரா்கள் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்திற்கு வியாழக்கிழமை வந்தனா். பென்காக் சிலாட் சங்கத்தின் கடலூா் மாவட்டச் செயலா்
இ.இளையராஜா தலைமையில், மாவட்டப் பொறுப்பாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாவட்ட பயிற்சியாளா்கள், உறவினா்கள் திரளானோா் கலந்து கொண்டு வீரா்களுக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனா்.