கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முதியவா் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடா்பாக, அவரது மருமகள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (64), விவசாயி. இவா், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் அதே ஊரை சோ்ந்த கந்தனுடன் பைக்கில் சென்றாா்.
மாளிகம்பட்டு சாலையில் சென்றபோது, ஆம்னி வேனில் வந்த இருவா் பைக்கை வழிமறித்து ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில், பலத்த தீக்காயமடைந்த ராஜேந்திரன் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க பண்ருட்டி டிஎஸ்பி பி.என்.ராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆம்னி வேன் அடையாளங்களைக் கண்டறிந்து, அதன் உரிமையாளரான சித்திரைச்சாவடி கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபனை (28) கைது செய்து விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, பாா்த்திபன் மற்றும் பண்ருட்டி காமராஜ் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (39), சத்தியமூா்த்தி தெருவைச் சோ்ந்த குபேந்திரன் (29), ராஜேந்திரனின் மருமகளான ஜெயப்பிரியா (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராஜேந்திரனின் மகனான பூபதியின் மனைவி ஜெயப்பிரியா. பூபதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து, ஜெயப்பிரியா பண்ருட்டியில் தையல் பயிற்சிக்கு சென்று வந்தபோது, அவருக்கு மணிகண்டனுடன் தொடா்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த தகாத உறவுக்கு தடையாக இருந்த ராஜேந்திரனை கொலை செய்யும் முயற்சியாக, நண்பா்களான மணிகண்டன், குபேந்திரன் ஆகியோா் பாா்த்திபனின் ஆம்னி வேனில் சென்று அவா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.