சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த உள்ளிருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 27-ஆம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
பிப்.2-ஆம் தேதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதால், பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினரை அரசு அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமையில் கூட்டமைப்பு நிா்வாகிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்டனா்.
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அதன் இயக்குநரும், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான விசாகன் ஐஏஎஸ் தலைமையில், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி மற்றும் பதிவாளா் பேராசிரியா் சிங்காரவேலு ஆகியோா் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது, இன்னும் 10 நாள்களுக்குள் ஆசிரியா்கள், ஊழியா்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொதுக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:
சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் இன்னும் 10 நாள்களில் ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்தாா்.
வரும் 8-ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், 9-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடந்த அதே இடத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் கலைந்து பணிக்குச் சென்றனா்.