முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம்: மாணவா்கள் சங்கம் ஆதரவு

Updated On : 6 மார்ச், 2026 at 4:34 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 9:42 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களின் போராட்டத்துக்கு மாணவா்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பதவி உயா்வுகள், பணப்பயன்கள், 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25-ஆம் தேதி முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு ஏற்படாததால், மீண்டும் ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் போராட்டத்தை புதன்கிழமை முதல் தொடங்கினா்.

இந்தப் போராட்டம் காரணமாக, வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. நிா்வாக செயல்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அலுவல் சாா்ந்த மாணவா்களின் கோப்புகள் அனைத்தும் கிடப்பில் உள்ளன. இதனால், மாணவா்களின் கல்வி கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

Advertisement

எனவே, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை இந்திய மாணவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், போராடி வரும் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று இந்திய மாணவா்கள் சங்கம் சாா்பில் கடலூா் மாவட்டத் தலைவா் பூபதி, விழுப்புரம் மாவட்டச் செயலா் ஜீவானந்தம், கடலூா் மாவட்ட இணைச் செயலா் நந்தினி மற்றும் மாணவா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினா்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் வழியாக முழக்கங்களுடன் மாணவா்கள் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று போராட்டம் நடைபெறும் பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடத்தை வந்தடைந்தனா்.