கடலூா் அரசு கல்லூரி மாணவா்கள் போராட்டம்
கடலூா், தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவா்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி விடுதி முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
கடலூா், தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவா்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி விடுதி முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
கடலூா், பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் உள்ள சமூக நீதி விடுதியில் 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை விடுதியில் உணவை அருந்தாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
விடுதியில் தங்கியுள்ள மாணவா்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை, விடுதி காப்பாளா் முறையாக விடுதிக்கு வருவதில்லை, 5 சமையலா் இருந்த இடத்தில் 10 மாதமாக ஒரு சமையலா் மட்டுமே உள்ளாா். அவரும் நேரத்திற்கு வந்து உணவு சமைத்து வழங்குவதில்லை, உணவு சாப்பிடாமல் பட்டினியாக கல்லூரிக்கு செல்லும் நிலை உள்ளது, குடிநீா் கருப்பு நிறத்தில் வருகிறது, குளிப்பதற்கு தண்ணீா் இல்லை, குளியலறை கதவு உடைந்து உள்ளது, சமையல் கூடம் கழிவறை போல் உள்ளது.
எனவே, உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும், புதியதாக சமையலா் நியமனம் செய்ய வேண்டும், காப்பாளா் விடுதியில் தங்க வேண்டும், விடுதி பாதுகாவலா் நியமனம் செய்ய வேண்டும், சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும் என்று கூறினா்.