குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலத்தை அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், க.இளமங்கலம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியின்போது, குடிநீா் விநியோகம் செய்யும் குழாய் சேதமடைந்ததால், கடந்த ஒன்றரை மாதங்களாக அப்பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறபடுகிறது.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதனால், அப்பகுதி மக்கள் குடிநீா் தேடி சாத்துக்குடல், ஆலிச்சிகுடி கிராமங்களுக்கு காலிக் குடங்களை எடுத்துச் சென்று தண்ணீா் சுமந்து வந்து பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை காலை திடீரென பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் கிடைத்து விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். மேலும், உரிய அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, அனைவரும் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால், விருத்தாசலம் - ஆலிச்சிகுடி - பெண்ணாடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.