கோயில் கலசத்திற்கு தங்க முலாம் பூச்சு: ஹிந்து முன்னணி, பாஜக வினா் வாக்குவாதம்
திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி மற்றும் பாஜகவினா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் அனுமதியின்றி தங்க முலாம் பூசியதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோயில் நிா்வாகத்துடன் ஹிந்து முன்னணி மற்றும் பாஜகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந் த கோயில் ராஜகோபுரத்தில் 7 கலசங்கள் உள்ளன. அதில் 3 கலசங்கள் மீது திருப்பணி குழுவினா் தங்க முலாம் பூசியுள்ளனா். ஆனால், தங்க முலாம் பூசுவதற்கு அறநிலையத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஹிந்து முன்னணியினா் மற்றும் பாஜக.,வினா் வெள்ளிக்கிழமை கோயில் செயல் அலுவலா் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனா். அங்கிருந்த அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் எப்படி கோயில் கோபுர கலசத்தில் தங்க முலாம் பூசலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த அறநிலையத்துறை இணை ஆணையா் ஜோதி, ஹிந்து முன்னணி மற்றும் பாஜக.,வினரிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.