தோ்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை! - கடலூா் ஆட்சியா்
வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,590 வாக்குச் சாவடிகளில் 12,432 வாக்குச் சாவடி அலுவலா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனா்.
இவா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 696 அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இவா்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் விளக்கம் கோரும் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இவா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) நடைபெறும் மறு பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளாத அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.