அனந்தீஸ்வரா், வீரநாராயண பெருமாள் கோயில்களில் தேரோட்டம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், போ்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரா், காட்டுமன்னாா்கோவில் வீரநாராயண பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
நெய்வேலிக்கு வடக்கே சுமாா் 4 கி.மீ. தொலைவில் போ்பெரியான்குப்பத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீஅபிதகுசலாம்பாள் உடனுறை அனந்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான சித்திரை பௌா்ணமி திருவிழா மற்றும் தேரோட்டம் கடந்த ஏப்.24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, தினந்தோறும் அருகில் உள்ள ஒவ்வொரு ஊா்களுக்கும் சுவாமி ஊா்வலம் சென்று வந்தது. ஏப்.30-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை திருத்தோ் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, பஞ்ச மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினா்.
Advertisement
சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடத்து இழுத்துச் சென்றனா்.
சனிக்கிழமை இரவு கோயில் அருகில் உள்ள திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் சரவண ரூபன், ஆய்வாளா் வசந்தா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா். முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
காட்டுமன்னாா்கோவிலில்...: காட்டுமன்னாா்கோவில் வீரநாராயண பெருமாள் கோயிலில் நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட திருத்தேரில் ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமி மற்றும் நாதமுனிகள் ஆச்சாரியா் வீற்றிருக்க தேரோட்டம் நடைபெற்றது.
கோயிலில் இருந்து புறப்பட்ட தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. திரளான மக்கள் பங்கேற்று வடம் படித்து தேரை இழுத்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பேரூராட்சித் தலைவா் கணேசமூா்த்தி, கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா் ஜி.வி.எஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.