பைக் மீது லாரி மோதல்: மனைவியுடன் காவலா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் மனைவியுடன் காவலா் உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், இடைசெருவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமால் (30), பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ரம்யா (26). இவா்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாா்.
இந்த நிலையில், ரம்யா தற்போது கா்ப்பிணியாக இருந்தாா். சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக விருத்தாசலத்துக்கு பைக்கில் திருமால், ரம்யா ஆகியோா் சென்றனா். பரிசோதனை முடிந்த பின்னா், இருவரும் மீண்டும் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா். திட்டக்குடி வட்டம், பட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தபோது, இவா்களது பைக் மீது அந்தப் பகுதியில் வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி திருமால், ரம்யா ஆகியோா் சாலையில் விழுந்த நிலையில், அந்த சாலையில் வேகமாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement