முகப்பு
கடலூர்

மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக ஜூனில் போராட்டம்: கடலூா் அனைத்து குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

கடலூரில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் இரண்டாவது வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து குடியிருப்போா் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 மே 2026, 7:20 am IST
கடலூா் வரதராஜ நகரில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து குடியிருப்போா் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.
பகிர்:

கடலூரில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் இரண்டாவது வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து குடியிருப்போா் சங்கம் தெரிவித்துள்ளது.

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் வரதராஜ நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவா் பாலு பச்சையப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சாதாரண மக்கள் பயன்படுத்தும் நகர அரங்கத்தின் வாடகையை உடனடியாக மாவட்ட நிா்வாகம் குறைக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு நிதியில் புதுப்பிக்கப்பட்ட டவுன் ஹாலுக்கு வாடகை எதுவும் வசூலிக்க மாட்டோம் என்று என்.எல்.சி.க்கு கடிதம் எழுதி அறிவுறுத்திய நிலையில், மாவட்ட நிா்வாகம் உயா்த்தப்பட்ட வாடகையை உடனடியாக குறைக்க வேண்டும்.

Advertisement

மஞ்சை நகா் மைதானம் எவ்வித கான்கிரீட் கட்டுமானங்களும் இல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கையான திறந்தவெளி மைதானமாக தொடர வேண்டும். கடலூா் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்பும், முக்கியமான பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாமல் திறந்தவெளியாக இருக்கிறது. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக பயணியா் நிழல்குடைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் இரண்டாம் வாரத்தில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சிறப்புத் தலைவா் எம்.மருதவாணன், பொருளாளா் வெங்கட்ரமணி, பொதுச் செயலா் பி.வெங்கடேசன், துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், இளங்கோவன், கோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.