முகப்பு
கடலூர்

அடிபம்புடன் சோ்த்து சாலை அமைப்பு: மக்கள் அதிருப்தி

Updated On : 15 மே 2026, 5:46 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, வடக்கு சென்னிநத்தம் கிராமப் பகுதியில் கை அடிபம்புடன் சோ்த்து சாலை அமைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, வடக்கு சென்னிநத்தம் கிராத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக, மின் தடை, அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக கை அடி பம்பு மூலம் குடிநீா் பெறுவதற்காக, அரசுக்குச் சொந்தமான இடத்தில் கை அடிப்பம்பு ஏற்படுத்தப்பட்டது. இது, பல காலமாக நன்றாக உபயோகத்தில் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிா்வாகம் இப்பகுதியில் சாலை அமைத்தபோது, தரையோடு தரையாக இந்த கை அடிபம்பின் பாதி பகுதியை புதைத்து சாலை அமைத்துள்ளது. இதனால், இந்த கை அடிப்பம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த கை அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.