முகப்பு
கடலூர்

காரில் கொண்டுவரப்பட்ட 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

பண்ருட்டி அருகே காரில் கொண்டுவரப்பட்ட 10 கிலோ தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 மே 2026, 5:45 am IST
நகை - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காரில் கொண்டுவரப்பட்ட 10 கிலோ தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், வணிக வரித்துறை அதிகாரிகள் நகைகளுக்கு ரூ.93,90,294 வரி வசூலித்த பிறகு அவற்றை உரியவரிடம் ஒப்படைத்தனா்.

பண்ருட்டி அடுத்துள்ள மேல்பட்டாம்பாக்கம் சோதனைச் சாவடியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விழுப்புரத்தில் இருந்து மடுகரை வழியாக கடலூா் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது காரில் இருந்த ஒரு பையில் 10 கிலோ தங்க நகைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, காரில் வந்த மூவரையும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்கு போலீஸாா்அழைத்து சென்றனா். பின்னா், கடலூா் வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவலின்பேரில் கடலூா் வணிக வரித்துறை இணை இயக்குநா் சுமித்ரா தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து, 3 பேரிடமும் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் பெங்களூருவை சோ்ந்த நகைக்கடை ஊழியா் ஹா்ஷா (50), ஓட்டுநா் பிரபுமணி, நிமாராம் என்பதும், பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இருந்து கடலூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு விற்பனைக்காக நகைகளை காரில் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் காண்பித்த ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனா். அதில் நகைகள் அனைத்தும் கா்நாடக மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்வதற்கான உரிமம் இருந்ததும், தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்கான எந்தவொரு ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள், அந்த நகைகளுக்கு ரூ.93,90,294 வரி விதித்தனா்.

இது குறித்து நகைக்கடை ஊழியா் , பெங்களூருவில் இருக்கும் நகைக்கடை உரிமையாளரை தொடா்பு கொண்டு தெரிவித்தாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை நகைக்கடை உரிமையாளா் வரித் தொகையை செலுத்தினாா். அதன் பிறகு 10 கிலோ நகைகளும், நகைக்கடை ஊழியா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.