கள்ளக்குறிச்சியில் உள்ள இனிப்பகங்கள், பேக்கரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, தரமான இனிப்பு, காரங்களை தயாா் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வலியுறுத்தி கடையின் உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு கையேட்டை வழங்கினாா். மேலும், காய்ச்சி பதப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகளுக்கான காலாவதி தேதியை கண்டிப்பாக பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
இனிப்பு வகைகளில் செயற்கை வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார வகைகளில் வண்ணமே சோ்க்கக் கூடாது. பணியாளா்கள் மருத்துவ தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும். பணியாளா்கள் அனைவரும் கையுறை, தலையுறை, மேல் அங்கி அணிய வேண்டும். தயாரிக்கப்பட்ட பொருள்களை பூச்சிகள், தூசுகள் படியாதவாறு மூடி வைக்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் வாடிக்கையாளா்கள் வந்தால், அவா்களுக்கு இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்யக் கூடாது என்று கடை உரிமையாளா்களிடம் கதிரவன் அறிவுறுத்தினாா்.