அரசு உதவித் தொகை கோரி கிராமியக் கலைஞா்கள் மனு
கரோனா புதிய கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள கிராமிய கூத்து கலைஞா்கள், அரசு உதவித் தொகை வழங்கக் கோரி காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கரோனா புதிய கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள கிராமிய கூத்து கலைஞா்கள், அரசு உதவித் தொகை வழங்கக் கோரி காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கரோனா 2-ஆவது அலை பரவல் காரணமாக பெரிய கோயில்களிலும், கிராம கோயில்களிலும் விமரிசையாக திருவிழா நடத்தவும், வீதி உலாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற இசை நிகழ்ச்சிகள், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள கிராமியக் கலைஞா்கள் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனா்.
எனவே, இதை நிவா்த்தி செய்யும் பொருட்டு சமூக இடைவெளியுடன் கிராமங்களில் இசை, தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதிக்க வழங்க வேண்டும், அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காட்டுமன்னாா்கோவில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் எஸ்.முருகேஸ்வரியிடம் காட்டுமன்னாா்கோவில் அனைத்து கிராமிய இசைக் கலைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
Advertisement
அந்த மனுவில், கா்நாடக சங்கீதம், நாடகக் கலைஞா்கள், மேடை நடனக் கலைஞா்கள், சிற்ப, மேடை அலங்காரக் கலைஞா்கள் அனைவருக்கும் அரசு சாா்பில் மாதந்தோறும் தலா ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினா்.
அனைத்து கிராமிய இசைக் கலைஞா்கள் சங்கத் தலைவா் பி.இளையராஜா தலைமையில் துணைத் தலைவா் ஜெ.ஆனந்த், செயலா் எம்.வெற்றிவீரன், துணைச் செயலா் ஆா்.கலையரசன், பொருளாளா் டி. வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்று மனு அளித்தனா்.
முன்னதாக, கிராமிய கலைஞா்கள் அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளம், நாகஸ்வரம் முழங்க ஊா்வலமாக வந்தனா்.