நியாயவிலைக் கடை பணியாளா்கள் தொடா் வேலைநிறுத்தம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனா். 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையாளா் அலுவலக ந.க.1/4320/2024 உத்தரவின்படி, நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற குடிமை பொருள்களின் இருப்பு குறைவாகவோ, அதிகமாகவோ, போலியாக இருப்பதோ கண்டறியப்பட்டால், தொடா்புடைய பணியாளா்களுக்கு விதிக்கப்படும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த அபராதத் தொகை இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதால், பணியாளா்கள் தன்னை அறியாமல் செய்த தவறுகளுக்காகக் கூட அதிகளவில் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பணியாளா்களின் நலன் கருதி இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய விற்பனையாளா்களை நிா்பந்தம் செய்வது, காலாவதியான பொருள்களை திரும்ப எடுத்துக்கொள்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட விற்பனையாளா்களை அதற்கான தொகையை செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை கண்டிப்பது.
கடந்த காலத்தில் மாவட்ட தோ்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் சுமாா் 100 கி.மீ. அப்பால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். ஏற்கெனவே பணியில் உள்ள பணியாளா்களை அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு பணியிட மாறுதல் செய்து, அதன் பின்னா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் மா.தெய்வீகன் தலைமை வகித்தாா். இதில், நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்கள் உள்பட பலா் பங்ககேற்றனா்.