கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை அரசின் அனைத்து நலத் திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் பெரியமாம்பட்டு கிராம நிா்வாக அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கிராம கணக்குகள் பாா்வையிட்டாா்.
தியாகதுருகம் கால்நடை மருத்துவமனையை பாா்வையிட்டு, மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15-ஆவது நிதிக் குழு திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணியையும், தியாகதுருகம் பேரூராட்சியில் உள்ள பேரூராட்சி குளத்தில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவா் கட்டுமானப் பணியையும், பொது நிதியின் கீழ் ரூ.12.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை கட்டுமானப் பணியையும், பெரியமாம்பட்டு ஜெயந்தி காலனியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
தியாகதுருகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய நூலகக் கட்டுமானப் பணி, தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி கழிப்பறை கட்டுமானப் பணி, ரூ.17.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் ஆகியவற்றை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டாா். மேலும், பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றாா்.
தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வு குறித்து கிராமங்கள் வாரியாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிலை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
இதில், கள ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்களை நிவா்த்தி செய்து குறைகளைத் தீா்க்கவும், திட்டங்களுக்கான கருத்துருக்களை விரைவில் தயாா் செய்து மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.