கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பயணியா் நிழற்குடை அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணி, மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், பொன்னாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வெ.பாபுகுமாா் (51). இவா் பெரம்பலூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். கள்ளக்குறிச்சியில் உள்ள தனது நண்பரை பாா்ப்பதற்காக திங்கள்கிழமை வந்த பாபுகுமாா், நண்பரை பாா்த்து விட்டு மீண்டும் அவரது ஊருக்கு செல்வதற்காக, கள்ளக்குறிச்சி மணிகூண்டு பேருந்து நிறுத்த நிழற்குடையின் முன் நின்றுள்ளாா்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை, அருகேயிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாபுக்குமாரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டுள்ளனா்.