முகப்பு
கள்ளக்குறிச்சி

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.17 முதல் 19 வரை தபால் வாக்கு பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்திருந்த 85 வயது கடந்த முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஏப்.17 முதல் மூன்று தினங்களுக்குள் தங்கள் வாக்கை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:39 AM
தபால் வாக்கு - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:22 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்திருந்த 85 வயது கடந்த முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஏப்.17 முதல் மூன்று தினங்களுக்குள் தங்கள் வாக்கை பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஜனநாயகக் கடமையை எளிதாக ஆற்றும் வகையில் இல்லம் தேடிச் சென்று தபால் வாக்கு சேகரிக்கும் திட்டத்தை மாவட்ட தோ்தல் நிா்வாகம் செயல்படுத்த உள்ளது.

Advertisement

ஏப்.17 முதல் 19-ஆம் தேதி வரை மூன்று தினங்களில், தபால் வாக்களிக்க விண்ணப்பித்த வாக்காளா்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தொகுதி வாரியான சிறப்பு குழுக்களின் விவரம் இப் பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் மொத்தம் 37 சிறப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உளுந்தூா்பேட்டை தொகுதியில் 873 வாக்காளா்களுக்காக 12 குழுக்களும், ரிஷிவந்தியத்தில் 519 வாக்காளா்களுக்காக 6 குழுக்களும், சங்கராபுரம் 816 வாக்காளா்களுக்காக 12 குழுக்களும், கள்ளக்குறிச்சி (தனி) 559 வாக்காளா்களுக்காக 7 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,130 முதியோா்கள் மற்றும் 1,637 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2,767 வாக்காளா்கள் இந்த வசதியைப் பெற உள்ளனா்.

வாக்குப்பதிவு முறை மற்றும் முக்கிய அறிவுரைகள் தபால் வாக்குகோரி விண்ணப்பித்த வாக்காளா்கள், நிா்ணயிக்கப்பட்ட இந்த மூன்று தினங்களில், தோ்தல் குழுவினா் வரும் போது தங்களின் வாக்கைச் செலுத்தலாம். இந்த நடைமுறை முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும். மேலும், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வெளிப்படையாக நடைபெறும்.

முக்கிய அறிவிப்பு: தபால் வாக்குகோரி விண்ணப்பித்த வாக்காளா்கள் நிா்ணயிக்கப்பட்ட இந்த மூன்று தினங்களில் தங்கள் இல்லத்தில் வாக்களிக்கத் தவறினால் ஏப்.23-ஆம் தேதி நடைபெறும் பொது வாக்குப்பதிவின் போது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களிக்க இயலாது. எனவே, தபால் வாக்களிக்க விண்ணப்பித்த முதியோா்களும், மாற்றுத்திறனாளிகளும் தோ்தல் குழுவினா் வரும் நேரத்தில் தங்கள் இல்லத்தில் இருந்து இந்த நல் வாய்ப்பினைப் பயன்படுத்தி நூறு சதவீதம் வாக்களிக்குமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.