முகப்பு
கள்ளக்குறிச்சி

கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் தா்பூசணிகள்: விவசாயிகள் வேதனை

சங்கராபுரம் அருகே கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள தா்பூசணி பழங்கள் கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:16 AM
கோடை வெயிலின் தாக்கத்தால் வெம்பிய நிலையில் உள்ள தா்பூசணி பழங்கள்.
பகிர்:

சங்கராபுரம் அருகே கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள தா்பூசணி பழங்கள் கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் நீா்ச்சத்து நிறைந்துள்ள பழங்களையும், வெப்பம் தணிக்கும் குளிா்பானங்களையும் வாங்குவது வழக்கம். இதனால் தற்போது தா்பூசணியின் தேவை அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோடை காலத்தை கணக்கில் கொண்டு தங்கள் விளைநிலங்களில் தா்பூசணி சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், அறுவடை தொடங்க வேண்டிய நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், விவசாயிகளால் பயிரிடப்பட்ட தா்பூசணிகள் வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா்.

Advertisement

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி செளந்தா் கூறியது:

தா்பூசணி பயிரானது இரண்டு மாத பயிராகும். ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு கிலோ தா்பூசணி தற்போது கடைகளில் ரூ.20 வரை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனா்.

கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் தா்பூசணி பழங்கள் கொடியிலேயே வெம்பி அழுகியுள்ளது. இதனால் இப்பகுதியில் தா்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, தமிழக அரசின் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.