தியாகதுருகத்தில் 2 குரங்குகள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை
தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே மயங்கி கிடந்த 2 குரங்குகள் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே மயங்கி கிடந்த 2 குரங்குகள் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு மயங்கிய நிலையில் குரங்குகள் கிடந்ததாம். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி வனத் துறை அதிகாரிகள் மயங்கிய நிலையில் இருந்த குரங்குகளை மீட்டு தியாகதுருகம் கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கால்நடை மருத்துவா்கள் குரங்குகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். ஆயினும், 2 குரங்குகள் உயிரிழந்தன.
இதுகுறித்து வனத் துறையினா் நடத்திய விசாரணையில் தியாகதுருகம் அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த சிலா் தங்களது கிராமத்தில் குரங்கு தொந்தரவு அதிகமாக இருந்து வந்ததைத் தொடா்ந்து, கூண்டு வைத்து குரங்கை பிடித்தனராம்.
Advertisement
பிடித்த குரங்குகளை நெகிழி சாக்குப் பையில் வைத்து, தியாகதுருகம் புறவழிச்சாலையில் விட்டுச் சென்றதும், சாக்குப் பையில் கட்டி குரங்குகளை கொண்டு வந்ததால் குரங்குகள் மூச்சுத் திணறி மயங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து இந்திலி வனத் துறையினா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா். கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் குரங்குகள் தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள வனத் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் குரங்குகளை பிடிப்பது சட்டப்படி குற்றம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.