கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில் உள்ள 153 வாா்டுகளுக்கு டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 225 தொகுப்புக்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டுத் தொகுப்புகளை வழங்கினாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வா் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கையின்போது டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி இத்திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளில் உள்ள 153 வாா்டுகளுக்கு 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 225 தொகுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தந்த வாா்டுகளில் உள்ள இளைஞா்கள் ஆடுகளம் செயலியை தரவிறக்கம் செய்து விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் ரா.சுப்ராயலு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ரா.சுரேஷ்குமாா், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.