கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு லாரிகளுக்கு இரவு 10 மணி வரை தடை
கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு லாரிகளுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரும்பு சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் நேரம், கட்டுப்பாடு தொடா்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது:
தியாகதுருகம் மற்றும் சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு சுமை ஏற்றி வரும் வாகனங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மேற்கண்ட தியாகதுருகம், சங்கராபுரம் வழியாக கரும்பு சுமை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் சாலையில் இருந்து கச்சிராயப்பாளையம் ஆலைக்கு செல்லும் வாகனங்கள் ரோடு மாமனந்தல், சடையம்பட்டு, தோப்பூா் சாலை வழியாக கச்சிராயப்பாளையம் ஆலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் சாலையில் இருந்து சேலம் - அரியலுா் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ரோடு மாமனந்தல், சிறுவங்ககூா், பெருவங்கூா், சாமியாா்மடம் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தியாகதுருகம் வழித்தடத்தில் வரும் வாகனங்கள் கனியாமூா் மும்முனை சந்திப்பு வழியாக கச்சிராயப்பாளையம் ஆலைக்குச் செல்லலாம்.
எனவே, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கள்ளக்குறிச்சி நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றாத வாகன உரிமையாளா் மற்றும் வாகன ஓட்டுநா் மீது மோட்டாா் வாகனம் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.