முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

Updated On : 16 மார்ச், 2026 at 5:43 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சிரகத்தில் நடைபெற்ற தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்துக்குள் அகற்றவேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, கடைபிடிக்க வேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

Advertisement

அரசு வளாகம், கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்துக்குள் அகற்றப்படவேண்டும். பொது வளாக கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின் கம்பங்கள் உள்ளாட்சிக்குள்பட்ட கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்துக்குள் அகற்றவேண்டும். தனியாா் வளாக கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், கட்சிக் கொடிகள் 72 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு வளாகம் கட்டடங்களில் உள்ளஅரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா் தங்கள் செலவில் அழித்து, அகற்றப்பட வேண்டும். அவா்கள் அகற்ற தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தொகையினை வசூல் செய்து, சம்பந்தப்பட்ட துறையினா் அழிக்கவேண்டும்.

அனைத்து அரசு அலுவலங்களிலும், கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ளஅரசியல் கட்சி தலைவா்களின் புகைப்படங்கள், தோ்தல் நடத்தை விதிகள் முடியும் வரை அகற்றவேண்டும்.

சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினா், தோ்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.