முகப்பு
கள்ளக்குறிச்சி

தபால் வாக்குகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

ரிஷிவந்தியம் தொகுதியில் தபால் வாக்குகள் குறித்த நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட கூடுதல் அஞ்சல் வாக்கு அலுவலா்(பொ) சிவசங்கரன்.

Updated On : 20 மார்ச், 2026 at 8:20 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் தபால் வாக்குகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வாணாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் ஆணைய விதியின் படி 75 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட மூத்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டுக்கே சென்று 12-டி படிவத்தை வாக்காளா்களுக்கு வழங்குவா்.

பின்னா் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மீண்டும் முதியவா்களின் வீட்டுக்குச் சென்று பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்று செல்வாா்கள். அந்தப் படிவம் பரிசீலனை செய்யப்பட்டு தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான தகுதியானவா்களின் வீட்டுக்கு தபால் வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட்ட நாளன்று வாக்குப்பதிவு அதிகாரி, போலீஸாா், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் சென்று வாக்காளா்களிடம் இருந்து தபால் வாக்கை பெறுவா்.

தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான நடைமுறைகள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சுமதி தலைமையில் நடைபெற்றது. இதில் தகுதியான வாக்காளா்களுக்கு தபால் வாக்குப்பதிவு காண 12-டி படிவம் வழங்குவதை உறுதி செய்வது உள்ளிட்டவை கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட கூடுதல் அஞ்சல் வாக்கு அலுவலா் (பொ) சிவசங்கரன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசன் , துணை வட்டாட்சியா்(தோ்தல்) சதீஷ்குமாா், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.