பிரதமருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்: நாம் தமிழர் கட்சி அறிவிப்பு
சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டைக் கைவிடக்கோரி, புதுச்சேரி வியாபாரிகள் மூலம் பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டத்தை வரும் 8ம் தேதி தொடங்க இருப்பதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டைக் கைவிடக்கோரி, புதுச்சேரி வியாபாரிகள் மூலம் பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டத்தை வரும் 8ம் தேதி தொடங்க இருப்பதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் மு.முகமது ரபீக் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சில்லறை வணிகத்தில் 51 விழுக்காடு நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் சுமார் 5 கோடிக்கும் அதிகமான சிறு, குறு வணிகர்களை இது பாதிக்கும். தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்ட உண்மை இது. 10 லட்சத்துக்கும் குறைவாக மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி போன்ற பகுதிகளில் இவை அனுமதிக்கப்படமாட்டாது என்று கூறினாலும், புதுச்சேரி மாநிலத்தில் எல்லையில், தமிழகப் பகுதியில் இவை அமைந்தாலும் கூட, புதுச்சேரி வணிகர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். பிறகு மெல்ல இவர்கள் புதுச்சேரிக்குள்ளும் நுழைந்துவிடுவார்கள்.
Advertisement
எனவே, சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டு அனுமதியைத் திரும்பப்பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் உள்ள அனைத்து சிறு, குறு வியாபாரிகள் மூலமும் பிரதமருக்குக் தந்தி அனுப்பும் போராட்டம் வரும் 8ம் தேதி தொடங்கி அக். 20ம் தேதி வரை நடைபெறும்.
இதற்காக அனைத்து வியாபாரிகளையும் நேரில் சந்தித்து, தந்தி அனுப்பும் மனுவை அளிக்க இருக்கிறோம். மேலும் அவர்களிடம் கையெழுத்து பெற்று, அதையும் பிரதமருக்கு அனுப்ப இருக்கிறோம் என்றார்.