தற்கொலைகளை ஆராய்ந்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் கையாள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்தில், மருத்துவ அதிகாரிகளுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும், நவீன வசதிகள் குறித்தும், கடந்த முறை ஆளுநர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது கூறிய ஆலோசனைகளை நிறைவேற்றியது குறித்தும் விளக்கமளித்தனர்.
பின்னர் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மருத்துவர்கள் தன்னலமற்ற சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும், தினந்தோறும் செய்யவேண்டிய வேலையை கலந்தாலோசனை செய்து திட்டமிட வேண்டும். அதனை முறையாக செயலாக்க வேண்டும்.
சிகிச்சை மட்டுமின்றி நோய்த் தடுப்பு முறைகளையும் கையாள வேண்டும். அதே போல மாதந்தோறும் நிகழும் மரணங்கள் குறித்து குறிப்பாக தற்கொலைகளை ஆராய்ந்து அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று கூறினார். சுகாதாரத் துறை செயலர் பாபு, சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.