புதுவையில் கத்தியைக் காட்டி ரகளையில் ஈடுபட்ட சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.
உருளையன்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸார் சனிக்கிழமை இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி அருகே 2 இளைஞர்கள் கையில் கத்தியுடன் குடிபோதையில் பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டனர். போலீஸாரை கண்டதும் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சுரேஷ் (24) நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்த மணிபாலன் (17) என்பது தெரிய வந்தது. மணிபாலனுக்கு 17 வயதே ஆவதால் அவரை போலீஸார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.