ஜிப்மரில் மகளிருக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அறிமுகம்
மகளிர் மருத்துவம் தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என இயக்குநர் எஸ்.சி.பரிஜா தெரிவித்தார்.
மகளிர் மருத்துவம் தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என இயக்குநர் எஸ்.சி.பரிஜா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜிப்மர் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் துறை சார்பில் தற்போது பெருகி வரும் பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் நோக்கில் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, வார நாள்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் சிறப்பு சிகிச்சை பிரிவுகள்:
10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு அனைத்து சனிக்கிழமைகளிலும், முன் - மகப்பேறு சிறப்பு சிகிச்சை பிரிவு அனைத்து வியாழக்கிழமைகளிலும் இயங்கும்.
ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொது மருத்துவ மற்றும் வலிப்பு நோய், சர்க்கரை வியாதி, மூட்டு வியாதி போன்ற பிரச்னைகள் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை சேவைகள் பிரிவு இயங்கும்.
சனிக்கிழமை உள்ளிட்ட எல்லா நாள்களிலும் குடும்பக் கட்டுப்பாடு சிறப்பு சிகிச்சை பிரிவும், ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் குழந்தைப்பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவும் இயங்கும்.
இதேபோல, ஆண் மலட்டுத் தன்மைக்கான சிறப்புச் சிகிச்சை பிரிவும் வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கும். மேலும், குடும்ப நலம் மற்றும் பேறுகால பின் கவனிப்பு சிறப்பு சிகிச்சை பிரிவு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, பெண் இனப்பெருக்க உறுப்புகள் சம்பந்தமான புற்றுநோய்களுக்கான பல துறைப்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவு, மாதவிடாய் நின்ற பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் தீர்வு மையம் ஆகியவை அனைத்து புதன்கிழமைகளிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.