புதுவை இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில், 4 மாதச் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில், 4 மாதச் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஆளுநர் உரையின்றி நடைபெற்றது. இந்த நிலையில், நான்கு மாத அரசின் செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெறும் என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, வியாழக்கிழமை (மார்ச் 30) காலை 10.30 மணிக்கு பேரவை கூடுகிறது.
நிதித் துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அடுத்த நாளான வெள்ளிக்கிழமை பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது.
தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டே தாக்கலானது. முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
தேர்தலில் வென்று பதவியேற்றுள்ள முதல்வர் நாராயணசாமி அரசும், இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்து வருகிறது. மாநில திட்டக் குழுக் கூட்டம் நடைபெறாத நிலையில், தற்போது தொடர்ந்து 7-வது ஆண்டாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ரூ.6,650 கோடிக்கு பட்ஜெட்: புதுச்சேரியின் பட்ஜெட் தொகை ரூ.6,650 கோடியாக உள்ளது. இதில் மாநில வருவாய் ரூ.4 ஆயிரம் கோடியாகும். மீதித் தொகையை மத்திய அரசிடம் இருந்தும், கடன்கள் மூலமும் மாநில அரசு பெறுகிறது. திட்டமில்லாச் செலவுக்கு கூடுதலாக ரூ.1200 கோடி தர வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், மத்திய அரசு அதற்கு இன்னும் செவிசாய்க்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இணை பட்ஜெட்டை தாக்கல் செய்யாததால் புதுவைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெரியாத நிலை உள்ளது. அதுகுறித்து தெரிந்தால்தான் ஏப்ரல் மாதம் பேரவையைக் கூட்டி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்தார்.