முகப்பு
புதுச்சேரி

தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை கட்டணம் வழங்காத மாநில அரசுக்கு கண்டனம்

இருதய அறுவை சிகிச்சை செய்ததற்காக தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்ததாத மாநில அரசுக்கு அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

இருதய அறுவை சிகிச்சை செய்ததற்காக தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்ததாத மாநில அரசுக்கு அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் விரோத கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது.
விலையில்லா அரிசி நிறுத்தம், காலம் தவறி முதியோர் ஓய்வூதியம் வழங்குவது, கல் வீடு கட்ட மானியம் குறைப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் நிறுத்தம், மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம், தொழிற்சாலைகள் மூடல் என காங்கிரஸ் அரசு தனது செயலற்ற தன்மையை மூடி மறைக்க, ஆளுநர் மீது பழிபோட்டு தப்ப நினைக்கிறது.
ஏழை எளிய மக்கள் இருதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற, அறுவை சிகிச்சை செய்து கொள்ள புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் இல்லை. இதனால் சென்னை தனியார் மருத்துவமனையுடன் அரசு ஒப்பந்தம் செய்தது.
தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மாதம்தோறும் புதுச்சேரிக்கு வந்து ஏழை மக்களை பரிசோதித்து இருதய நோய் அறுவை சிகிச்சை செய்தனர். மாதத்திற்கு 8 பேருக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 தற்போது இந்த இருதய அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி தனியார் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு செலுத்தவில்லை. இதனால் சிறப்பு நிபுணர்களின் வருகை குறைந்து, அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர்.
 புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருதய நோய் அறுவை சிகிச்சைக்கான ஸ்டென்ட் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால், எந்த உபகரணங்களும் வாங்கப்படவில்லை.
புதுச்சேரி அரசு பல கோடி ரூபாய் நிலுவை வைத்திருப்பதால் மருந்து நிறுவனங்கள் தங்கள் விநியோகத்தை நிறுத்திவிட்டன.
பல லட்சம் ரூபாய் செலுத்தி சிகிச்சை பெற வசதியில்லாத ஏழை மக்கள் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். சிலர் சிகிச்சை கிடைக்காமல் மரணமும் அடைந்துள்ளனர். உடனடியாக நிலுவைத் தொகையை செலுத்தி ஏழை மக்களுக்கு தடையில்லாத சிகிச்சை கிடைக்க வழி செய்ய வேண்டும்.
சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதாக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்த நிதி எங்கே செல்கிறது? உயிர் காக்கும் பிரச்னைக்குக்கூட நிதி ஒதுக்காதது ஏன்? மருந்துகளுக்கும், இருதய நோய் சிறப்பு நிபுணர்களுக்கும் பாக்கித்தொகை வைக்க வேண்டிய அவசியம் என்ன?  யார் ஆதாயம் பெறுவதற்காக திட்டம் கிடப்பில் போடப்படுகிறது?
மக்களின் உயிர் பிரச்னையில் ஆளுநரும், காங்கிரஸ் அரசும் கவனம் செலுத்தாவிட்டால் அதிமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →