புதுவையில் கடலோர காவல் படை மற்றும் போலீஸார் மூலம் கடலோர பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுப்பதற்காக 6 மாதங்களுக்கு ஒருமுறை கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் ஆபரேஷன் ஆம்லா என்ற பெயரில் நடைபெற்று வந்த பாதுகாப்பு ஒத்திகை, தற்போது சாகர் கவாச் (கடல் கவசம்) என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
அதன்படி, தமிழகம், புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை காலை முதல் கடலோர பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.
புதுவை கடலோரப் பகுதிகளில், இந்திய கடலோர காவல் படையினருடன், புதுவை போலீஸார் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2 நாள்கள் இந்த ஒத்திகை நடைபெறும்.
கடற்கரை மார்க்கத்தையொட்டியுள்ள, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளிலும், கடற்கரை பகுதியில் உள்ள தங்குமிடங்கள், சுற்றுலா பகுதிகளிலும் போலீஸார் ரோந்து சென்று வாகனச் சோதனை நடத்தியும், புதிய நபர்கள் குறித்தும் ஆய்வும் மேற்கொண்டனர்.