முகப்பு
புதுச்சேரி

பெண் காவலர்களுக்கு பரிசளிப்பு

பெண் காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா புதுவை ஆளுநர்

Updated On : 9 ஏப்ரல், 2018 at 9:29 AM
பகிர்:

பெண் காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா புதுவை ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
புதுவை பெண் காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஏப்.1-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்றது.  இந்தப் போட்டிகள் புதுச்சேரி கோரிமேடு காவல் பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
காவல் துறை,  ஊரகக் காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  100 மீ.,  200 மீ.,  400 மீ., ஓட்டம்,  நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல்,  கோகோ,  வாலிபால்,  கபடி,  எறிப்பந்து,  குண்டு எறிதல்,  கயிறு இழுத்தல் உள்பட 12 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.  ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் கிரண் பேடி பரிசுகளை வழங்கினார்.
தனி நபர் சாம்பியன் பட்டம் வென்ற 27 பேருக்கும், குழு சாம்பியன் பட்டம் வென்ற 4 அணிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்.  காட்டேரிகுப்பம்  காவல் நிலைய காவலர் கல்பனா 4 பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். புதுவை காவல் துறைத் தலைவர் சுனில்குமார் கெளதம்,  டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன்,  கடலோரக் காவல் படை டி.ஐ.ஜி. தியாகி,  புதுவை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக் குழு ஆணையர் பிரியா, பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக புகார் அளிக்கும் அமைப்பின் மாவட்டக் குழுத் தலைவி வித்யா ராம்குமார், அனைத்துக் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.